சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
412 - காராடக் குழல் (திருவருணை) Songs from this thalam திருவருணை 1328 - ஏறுமயிலேறி
412 திருவருணை திருப்புகழ் ( - வாரியார் # 528 )
காராடக் குழல்
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தானா தத்தன தானா தத்தன
தந்தன தந்தன தான தந்தன
தானா தத்தன தானா தத்தன
தந்தன தந்தன தான தந்தன
தானா தத்தன தானா தத்தன
தந்தன தந்தன தான தந்தன ...... தந்ததான
காரா டக்குழ லாலா லக்கணை
கண்கள்சு ழன்றிட வேமு கங்களி
னாலா பச்சிலை யாலே மெற்புசி
மஞ்சள்க லந்தணி வாளி கொந்தள
காதா டக்கலன் மேலா டக்குடி
யின்பர சங்குட மார்ப ளிங்கொளி ...... கொங்கைமாதர்
காசா சைச்செய லாலே சொக்கிடு
விஞ்சையர் கொஞ்சிடு வாரி ளங்குயில்
போலே நற்றெரு வூடா டித்துயல்
தொங்கல்நெ கிழ்ந்திடை யேது வண்டிட
கால்தா விச்சதி யோடே சித்திர
மென்பந டம்புரி வாரு டன்செயல் ...... மிஞ்சலாகிச்
சீரா டிச்சில நாள்போய் மெய்த்திரை
வந்துக லந்துயி ரோட வங்கமொ
டூடா டிப்பல நோயோ டுத்தடி
கொண்டுகு ரங்கென வேந டந்துசொல்
சீயோ டிக்கிடை பாயோ டுக்கிய
டங்கிய ழிந்துயி ரோடு ளைஞ்சொளி ...... யுங்கண்மாறிச்
சேரா மற்பொறி கேளா மற்செவி
துன்பமொ டின்பமு மேம றந்துபின்
ஊரார் சுற்றமு மாதோர் மக்களு
மண்டியு மண்டையு டேகு விந்திது
சீசீ சிச்சிசி போகா நற்சனி
யன்கட வென்றிட வேகி டந்துடல் ...... மங்குவேனோ
மாரோன் முப்புர நீறா யுற்றிட
அங்கியு மிழ்ந்திடு வோரி பம்புலி
தோல்சீ யத்தொடெ யேகா சர்ச்சடை
கங்கையி ளம்பிறை யார ணிந்தவர்
மாடே றிக்கட லாலா லத்தையு
முண்டவ ரெந்தைசி வாநு பங்குறை ...... யென்றன்மாதா
மாலோ னுக்கிளை யாள்மா பத்தினி
யம்பிகை சங்கரி மோக சுந்தரி
வேதா மக்கலை ரூபாள் முக்கணி
ரம்பிய கொங்கையி னாள்ப யந்தருள்
மாஞா னக்கும ராதோ கைப்பரி
யின்பத வண்குரு வேயெ னஞ்சுரர் ...... தொண்டுபாடச்
சூரார் மக்கிட மாமே ருக்கிட
அங்கட லெண்கிரி யோடி பங்கொடு
தீபே ழற்றிட பாதா ளத்துறை
நஞ்சர வின்பண மாயி ரங்கெட
சூழ்வா ளக்கிரி தூளா கிப்பொடி
விண்கணி றைந்திட வேந டம்புரி ...... கின்றவேலா
சோர்வே தத்தலை மேலா டிச்சுக
பங்கய செங்கர மோட கம்பெற
வாகா னக்குற மாதோ டற்புத
மங்குல ணங்குட னேம கிழ்ந்துநல்
தூணோ டிச்சுட ராகா சத்தைய
ணைந்துவி ளங்கரு ணாச லந்திகழ் ...... தம்பிரானே.
Easy Version:
கார் ஆடு அக் குழல் ஆல் ஆலக்கணை கண்கள் சுழன்றிடவே
முகங்களில் நாலா பச்சிலையாலே மெல் பூசி மஞ்சள் கலந்து
அணி வாளி கொந்தள(ம்) காது ஆடக் கலன் மேல் ஆடக்
குடி இன்ப ரசம் குடம் ஆர் பளிங்கு ஒளி கொங்கைமாதர்
காசு ஆசைச் செயலாலே சொக்கிடு(ம்) விஞ்சையர்
கொஞ்சிடுவார் இளம் குயில் போலே நல் தெரு ஊடாடித்
துயல் தொங்கல் நெகிழ்ந்து இடையே துவண்டிட கால் தாவிச்
சதியோடே சித்திரம் என்ப நடம் புரிவாருடன் செயல்
மிஞ்சலாகி
சீர் ஆடிச் சில நாள் போய் மெய் திரை வந்து கலந்து உயிர்
ஓட அங்கமோடு ஊடாடிப் பல நோயோடுத் தடி கொண்டு
குரங்கு எனவே நடந்து
சொல் சீ ஓடிக் கிடை பாயோடு உக்கி அடங்கி அழிந்து
உயிரோடு உளைஞ்சு ஒளியும் கண் மாறிச் சேராமல் பொறி
கேளாமல் செவி துன்பமொடு இன்பமுமே மறந்து
பின் ஊரார் சுற்றமும் மாது ஓர் மக்களும் மண்டியும்
அண்டையுடே குவிந்து இது சீ சீ சிச்சி சி போகா நல்
சனியன் கட என்றிடவே கிடந்து உடல் மங்குவேனோ?
மாரோன் முப்புர(ம்) நீறு ஆய் உற்றிட அங்கி
உமிழ்ந்திடுவோர் இபம் புலி தோல் சீயத்தொடே ஏகாசர்ச்
சடை கங்கை இளம் பிறை ஆர் அணிந்தவர்
மாடு ஏறிக் கடல் ஆலாலத்தையும் உண்டவர் எந்தை
சிவன் அநுபங்கு உறை என்றன் மாதா மாலோனுக்கு
இளையாள் மா பத்தினி
அம்பிகை சங்கரி மோக சுந்தரி வேதா(க)ம கலை ரூபாள்
முக்க(ண்)ணி நிரம்பிய கொங்கையினாள் பயந்தருள் மா
ஞானக் குமரா தோகைப் பரியின் பத வண் குருவே என அம்
சுரர் தொண்டு பாட
சூரார் மக்கிட மா மேரு உக்கிட அம் கடல் எண் கிரியோடு
இபம் கொடு தீபு ஏழ் அற்றிட பாதாளத்து உறை நஞ்சு
அரவின் பணம் ஆயிரம் கெட சூழ் வாளக் கிரி தூளாகிப்
பொடி விண் கண் நிறைந்திடவே நடம் புரிகின்ற வேலா
சோர்(வு) வேதத் தலை மேல் ஆடிச் சுக பங்கய செம் கரமோடு
அகம் பெற வாகு ஆனக் குற மாதோடு அற்புத மங்குல்
அணங்குடனே மகிழ்ந்து
நல் தூண் ஓடிச் சுடர் ஆகாசத்தை அணைந்து விளங்கு
அருணாசலம் திகழ் தம்பிரானே. Add (additional) Audio/Video Link
முகங்களில் நாலா பச்சிலையாலே மெல் பூசி மஞ்சள் கலந்து
அணி வாளி கொந்தள(ம்) காது ஆடக் கலன் மேல் ஆடக்
குடி இன்ப ரசம் குடம் ஆர் பளிங்கு ஒளி கொங்கைமாதர் ...
கருமேகம் போல விளங்கும் அந்தக் கூந்தல். பெரு விஷம் தோய்ந்த அம்பு
போன்ற கண்கள் சுழல, முகங்களில் நாலாவிதமான பச்சிலைகளை மேலே
பூசி மஞ்சளையும் கலந்து அணிந்துள்ளவர்கள். காதணியானது
கூந்தலுக்கு அருகில் காதில் ஆட, ஆபரணங்கள் மேலே ஆட, இன்ப ரசம்
குடி கொண்டிருக்கின்ற குடங்கள் போன்று, பளிங்கின் ஒளியைக்
கொண்ட மார்பகங்களை உடைய விலைமாதர்கள்.
காசு ஆசைச் செயலாலே சொக்கிடு(ம்) விஞ்சையர்
கொஞ்சிடுவார் இளம் குயில் போலே நல் தெரு ஊடாடித்
துயல் தொங்கல் நெகிழ்ந்து இடையே துவண்டிட கால் தாவிச்
சதியோடே சித்திரம் என்ப நடம் புரிவாருடன் செயல்
மிஞ்சலாகி ... காசின் மேற்கொண்ட காமச் செயல்களால் மயக்கப் பொடி
போடுகின்ற மாய வித்தை வல்லவர். கொஞ்சிப் பேசுபவர்கள். இளங் குயில்
போல் நல்ல தெருக்களில் அங்கும் இங்கும் செல்பவராய், அசைகின்ற
மேலாடை நெகிழவும், இடை துவளவும், கால்கள் தாவ, தாள ஒத்துடன்
சித்திரப் பதுமை என்னும்படி நடனம் செய்கின்ற வேசியர்களுடன்
இணக்கம் அதிகமாகி,
சீர் ஆடிச் சில நாள் போய் மெய் திரை வந்து கலந்து உயிர்
ஓட அங்கமோடு ஊடாடிப் பல நோயோடுத் தடி கொண்டு
குரங்கு எனவே நடந்து ... சீராக கொஞ்ச காலம் கழித்து, உடலில்
(தோல் சுருங்குதலால் உண்டாகும்) சுருக்கங்கள் வந்து ஏற்பட, உயிர்
போகும்படி உடலோடு வேதனைப்பட்டு பல நோய்களுடன், தடியைப்
பிடித்துக் கொண்டு குரங்கைப் போல நடந்து,
சொல் சீ ஓடிக் கிடை பாயோடு உக்கி அடங்கி அழிந்து
உயிரோடு உளைஞ்சு ஒளியும் கண் மாறிச் சேராமல் பொறி
கேளாமல் செவி துன்பமொடு இன்பமுமே மறந்து ... இழிவாகச்
சொல்கின்ற சீ என்னும் சொல் ஓடி எங்கும் பரவி, கிடக்கை படுக்கையாகி,
மெலிந்து, ஒடுங்கி, அழிதலுற்று, உயிருடனே வேதனை உற்று,
கண்களினின்றும் ஒளியும் விலகி, அறிவு ஒருவழிப்படாமல், காது
கேட்காமல், இன்ப துன்பம் இரண்டையும் மறந்து,
பின் ஊரார் சுற்றமும் மாது ஓர் மக்களும் மண்டியும்
அண்டையுடே குவிந்து இது சீ சீ சிச்சி சி போகா நல்
சனியன் கட என்றிடவே கிடந்து உடல் மங்குவேனோ? ...
பிறகு, ஊராரும், சுற்றத்தாரும், பெண்டிரும், மற்று மக்களும் நெருங்கியும்,
பக்கத்தில் கும்பலாகக் கூடியும், இது இப்போது போகாது, சீ சீ சிச்சி சி,
நல்ல சனியன், கிடக்கட்டும் என்று கூறிச் செல்ல இப்படியே கிடந்து
உடல் அழிவேனோ?
மாரோன் முப்புர(ம்) நீறு ஆய் உற்றிட அங்கி
உமிழ்ந்திடுவோர் இபம் புலி தோல் சீயத்தொடே ஏகாசர்ச்
சடை கங்கை இளம் பிறை ஆர் அணிந்தவர் ... மன்மதனும்,
மூன்று புரங்களும் சாம்பலாகும்படி நெருப்பை (நெற்றிக் கண்ணிலிருந்து)
வெளிச் செலுத்தினவர், யானை, புலி இவைகளின் தோலையும், சிங்கத்தின்
தோலையும் போர்வையாக உடையவர், சடையில் கங்கை, இளம்பிறை,
ஆத்தி மாலை சூடியுள்ளவர்,
மாடு ஏறிக் கடல் ஆலாலத்தையும் உண்டவர் எந்தை
சிவன் அநுபங்கு உறை என்றன் மாதா மாலோனுக்கு
இளையாள் மா பத்தினி ... ரிஷபத்தில் ஏறுபவர், கடலில் எழுந்த
கொடிய (ஆலகால) விஷத்தை உண்டவர், எனது தந்தையாகிய
சிவபெருமானோடு கூட அவர் திருமேனியில் பாதியாக உறையும் எனது
தாய், திருமாலுக்குத் தங்கை, மகா பத்தினி,
அம்பிகை சங்கரி மோக சுந்தரி வேதா(க)ம கலை ரூபாள்
முக்க(ண்)ணி நிரம்பிய கொங்கையினாள் பயந்தருள் மா
ஞானக் குமரா தோகைப் பரியின் பத வண் குருவே என அம்
சுரர் தொண்டு பாட ... அம்பிகை, சங்கரி, அன்புக்கு உரிய சுந்தரி,
வேதாகம நூல்களின் உருவம் வாய்ந்தவள், (சூரியன், சந்திரன்,
அக்கினி என்ற) மூன்று கண்களை உடையவள், பருத்த மார்பகங்களை
உடையவள் ஆகிய பார்வதி பெற்றருளிய சிறந்த ஞானப் புதல்வனே,
கலாபக் குதிரையாகிய மயில் மேல் திருவடியை வைத்துள்ளவனே,
வளமை வாய்ந்த குரு மூர்த்தியே என்று தேவர்கள் அடிமை பூண்டு பாட,
சூரார் மக்கிட மா மேரு உக்கிட அம் கடல் எண் கிரியோடு
இபம் கொடு தீபு ஏழ் அற்றிட பாதாளத்து உறை நஞ்சு
அரவின் பணம் ஆயிரம் கெட சூழ் வாளக் கிரி தூளாகிப்
பொடி விண் கண் நிறைந்திடவே நடம் புரிகின்ற வேலா ...
அசுரர்கள் அழிந்து போக, பெரிய மேரு மலை மெலிவு அடைய, அழகிய
கடலும், அஷ்ட கிரிகளும், அஷ்ட கஜங்களோடு, ஏழு தீவுகளும்
வற்றிப் போக, பாதாளத்தில் உள்ள விஷப் பாம்பாகிய ஆதிசேஷனுடைய
பணாமுடிகள் ஆயிரமும் கேடு உற, சூழ்ந்துள்ள சக்ரவாள கிரி தூள்பட்டு,
அத்தூள் விண்ணில் உள்ள எல்லா இடங்களிலும் நிறையும் வண்ணம்
நடனம் செய்கின்ற வேலனே,
சோர்(வு) வேதத் தலை மேல் ஆடிச் சுக பங்கய செம் கரமோடு
அகம் பெற வாகு ஆனக் குற மாதோடு அற்புத மங்குல்
அணங்குடனே மகிழ்ந்து ... (நெறி பல கொண்டு) தளர்வு உறும்
வேதத்தின் உச்சியின் மேல் விளங்குகின்றவனே, சுகத்துடன் உனது
தாமரை போன்ற சிவந்த கரத்துடன் உனது உள்ளத்தையும் பெற்ற அந்த
அழகிய குறப் பெண்ணான வள்ளியுடனும், அற்புதமான விண்ணுலகப்
பெண்ணான தேவயானையுடனும் மகிழ்ச்சி உற்று,
நல் தூண் ஓடிச் சுடர் ஆகாசத்தை அணைந்து விளங்கு
அருணாசலம் திகழ் தம்பிரானே. ... நல்ல அக்கினி ஸ்தம்பமாகிய
சிவச்சுடர் உயர்ந்தோடி ஆகாசத்தை அளாவி விளங்கும்
திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் தம்பிரானே.
1
Similar songs:
தானா தத்தன தானா தத்தன
தந்தன தந்தன தான தந்தன
தானா தத்தன தானா தத்தன
தந்தன தந்தன தான தந்தன
தானா தத்தன தானா தத்தன
தந்தன தந்தன தான தந்தன ...... தந்ததான
This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
send corrections and suggestions to admin @ sivaya.org
thiruppugazh song